மிக்கேல் அதிதூதர்

நான் என் பள்ளி தோழர்களுடன் மலையடிபட்டியில் ஒரு NSS Camp சென்ற பொழுது இரவு சில நேரங்களில் இயற்கை அழைப்புகளை கழிப்பதற்காக எழுவது உண்டு. இருட்டில் தனியாக செல்ல பயந்து இருவர் இருவராக செல்வது வழக்கம். சில நாட்கள் சிறு சத்தம் கேட்கும் போது சில சமயங்களில் ஒரு வித பயம் தோன்றும் அப்போது நான் என் பெரியமமா சொல்லி தந்த காவல் தூதர் செபத்தை சொல்லி செல்வது வழக்கம் முதலில் நான் முணுமுணுத்து செல்வதை கண்ட என் தோழர்கள் கேட்ட பின்பு அவர்களுக்கும் நான் அச்செபத்தை சொல்லிதந்தேன். சமிபத்தில் ராணுவத்தில் பணிபுரியும் என் நண்பன் கார்த்திகேயன் மச்சி இப்பகூட பயமா இருந்தா அந்த செபத்த தான் சொல்லுறேன் டா பயம் போகுதான்னு தெரியல ஆன நம்பிக்கை வருது டா ன்னு சொன்னான்.

ஆம் அவர்தான்  தானியேல் நூலில்  இஸ்ரயேலின் பாதுகாப்பாளர், மக்களை காக்கும் தலைமை காவலர், துன்பத்தில் மீட்கும் இறைவனின் மீட்பர், மோசேயின் உடலுக்காக அலகையுடன் வாதிட்ட தேவதூதர்,திருவெளிப்பாடில் அரக்க பாம்புடன் போரிட்டு நம்மை மீட்ட அதிதூதர்.

மேற்கூறிய பத்தி தராத ஆச்சரியத்தை "எங்களுக்கு காவலாய் இருக்கிற காவல்சம்மனசானவரே !" என தொடங்கும் இச்செபம் தரவல்லது.


இவ்வுகத்தில் தோன்றிய அனைத்து மதங்களையும் Abrahamic Religion and Non- Abrahamic Religion என்று பிரிக்கலாம் அவற்றில் கத்தோலிக்க கிறிஸ்தவமும், யூதரும், இஸ்லாமியரில் சிலரும் நம்பும் விஷயம் இது

கடவுளுக்கு முன்பாக 7 வானவர்கள் எப்பொழுதும் நிற்பார்கள். ஒவ்வொரு தூதருக்கு கீழும் ஏராளமான தேவதைகள் உண்டு, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி.

அதில் முதலாமாவர் மிக்கேல் அதிதூதர் மிக்கேல்  என்ற எபிரேயச் சொல்லுக்கு ""கடவுளுக்கு நிகர் யார்?'' என்பது பொருள். இறைவனுக்கு எதிராக சிந்தித்த லூசிபரையும் அவன் தோழர்களையும் அதிதூதர் மிக்கேல் நல்ல தூதர்களை தன்னோடு இணைத்துக்கொண்டு அவர்களை நரகத்தில் வீழ்த்தினார். அதனால் தலைமை தூதர் ஆனார். இவரே நம் திருத்தந்தையின் (போப்பாண்டவர்) காவல் தூதரும், நற்கருணையின் பாதுகாவலரும் ஆவார்.

அடுத்தபடியாக கபிரியேல் தேவதூதர் கபிரியேல் என்ற எபிரேயச் சொல்லுக்கு "கடவுளின் ஆற்றல்'' என்பது பொருள். ஆறுதல் தரும் செய்திகளை விண்ணிலிருந்து மண்ணகத்திற்கு கொண்டு வருபவர். திருமுழுக்கு யோவானின் பிறப்பை சக்கரியாவுக்கும், இறைமகன் இயேசுவின் பிறப்பை அன்னை மரியாளுக்கும் அறிவித்தவர். இவரே நற்செய்தியின் தூதர் எனப்படுபவர்.

அடுத்து ரஃபேல் தேவதூதர் ரஃபேல் என்ற எபிரேயச் சொல்லுக்கு "கடவுள் குணமளிக்கிறார்'' என்பது பொருள். இவரே நோயாளிகளுக்கும், பயணிகளுக்குமான பாதுகாவலர். நிறைவாக, ""உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக. உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக '' என்று கூறி நமக்கு நிலையான அமைதியைக் கொடுக்க வந்தவர்கள்.

இவர்களில் கபிரியேல் என்பவர்தான் அடிக்கடி தகவல் கொண்டு வருவார்.மரியாள் முதல் நபிபெருமான் வரைக்கும் வந்தவர் அவர்தான்

இந்த வானவர்களுக்கெல்லாம் ஒரு தலைவர் உண்டு,அவர்தான் மிக்கேல் அல்லது மைக்கேல்.மிக பெரும் பொறுப்பு அவருடையது

ஒரு சிறு கடவுள் முதலில் வேறு உலகையும் வான தூதர்களையும்தான் படைத்தாராம்,அந்த தூதருக்கு முதல் தலைவனாக இருந்தவன் லூசிபேர் என்பவனாம் கடவுள் தன்னை புகழ்ந்துபாடும் அணிக்கு தலைவராக அவனை நியமித்தாராம், அவனோ  சரியான நேரம் பார்த்து OPS, EPS சசிகலாவிற்கு செய்ததுபோல போர்கொடி தூக்கிவிட்டானாம்.

கடவுள் உடனே நான் உன்னைப்போல் ஆயிரம் பேரை படைப்பேன் என சவால் விட்டு, மண்ணிலிருந்து மனிதரை படைத்தாராம்

அதாவது வானதூதர்கள் நெருப்பிலிருந்து படைக்கபட்டவர்களாம்,மனிதன் என்பவன் மண்ணிலிருந்து படைக்கபட்டவனாம்.

கடவுள் மனிதனை படைத்து, நீ என்னை அவமதித்தாய் அல்லவா? இப்படி உன்னால் படைக்க முடியுமா? ம்ம் அவனை வணங்கு அதுதான் உனக்கு தண்டனை என கட்டளையிட்டாராம்

என்னது? இந்த மாபெரும் லூசிபர்,கேவலம் மண்ணின் பொம்மையினை ஆதரிப்பதா? என மறுத்தானாம் லூசிபர்

ஆத்திரமடைந்த‌, கடவுள் இந்த மிக்கேல் தூதரிடம் இவனை பிடித்து கீழே தள்ளிவிடு என உத்தரவிட்டாராம், பெரும் போரில் கீழே வீழ்த்தபட்டானால் லூசிபர், அவனோடு அவனின் ஆதரவாளர்களும் வெளிநடப்பு செய்ததாம்.

பரலோகத்தில் இருந்து கீழே விழுந்த லூசிபர் தன் சிறகுகளை தட்டி சவால் விட்டிருக்கின்றான், எந்த சொர்க்கத்தை நான் இழந்தேனோ, அந்த சொர்க்கத்தை மனிதன் அடைய விடவே மாட்டேன், அவன் கடவுள் பாதையினை மறந்து, உலக மாயைகளில் மூழ்கி கடவுளுக்கு அருவருப்பான பாவங்களை செய்ய வைப்பேன், அதனை பார்த்து கடவுள் வேதனையில் சாக வேண்டும் என முழங்கினார்.
அதிலிருந்துதான் மனிதருக்கும் சாத்தானுக்கும் இடையிலானா யுத்தம் உலகில் தொடங்கிற்றாம்.

ஆதாமும் ஏவாளும் கடவுளின் மக்களாய் இருந்தபொழுது இவன் தான் பாம்பு வடிவில் சென்று அவர்களை பழம் சாப்பிட வைத்து, கடவுளையே தலைகுனிய வைத்தானாம்.

கடவுள் அன்று ஒரு பிரகடனம் செய்தார், லூசிபருக்கு எதிராக இந்த மிக்கேல் என்பவரை நான் வானலோக தளபதியாக்குகின்றேன். இவரை தேடுபவர்களை சாத்தான் ஒன்றும் செய்யமுடியாது என சக்தியும் கொடுத்தாராம்.

அதுமுதல் மிக்கேல் அதிதூதரின் பக்தி தொடங்கிற்று, பழைய ஏற்பாடு எல்லாம் அவரே பிராதனம், இன்றும் யூதமதம் தன் இனத்தின் காவலனாக அவரையே சொல்கின்றது.
இஸ்ரவேல் காலத்தில் கூட,பாரசீக மன்னனுக்கு எதிராக அவன் செய்யும் யுத்தத்தில் சில வானவர்களும்,மிக்கேலும் அவனுக்கு உதவியாக சண்டையிட்டதாக தானியேல்  புத்தகத்தில் காணலாம்.

அதாவது கடவுளை நம்பி,சாத்தானை வெறுப்பவர்களின் நலனுக்காக மிக்கேலே யுத்தம் செய்வார் என்பது நம்பிக்கை. ஆய்த எழுத்து படத்தின் நாயகன் பெயர் மைக்கில் என்று சூட்டபட்டிருக்கும் அப்பெயரையும் நாயகனின் காட்சி படைப்பையும் நுணுக்கமாக கவனித்தால் மணிரத்னத்தை வியக்கலாம்.
சாதாரண தூதர் அல்ல அவர், பைபிளின் தொடக்கம் முதல், புதிய ஏற்பாடின் கடைசி திருவெளிப்பாடு வரை, அதாவது உலகம் அழியும் வருங்காலம் வரைக்கும் அவரின் செயல், முக்கியத்துவம் பற்றி சொல்லபட்டிருக்கின்றது.

கத்தோலிக்க கிறிஸ்தவம் அவருக்கு மகா முக்கிய இடத்தை, யூதரை போலவே கொடுத்திருக்கின்றது. என்றும்என்றும் எந்த  கத்தோலிக்க ஆலயங்களிலும் அவர் சொரூபம் இன்றி அமையாது. எந்த ஒரு தேர் பவனியிலும் முன் செல்பவர் அவரே.

பிரிவினைகளைகாரர்களை பற்றி சொல்ல வேண்டியதில்லை, அவர்களுக்கு தேவை ஒரு மைக், ஒரு காணிக்கை பெட்டி, முட்டிகொள்ள ஒரு சுவர் அவ்வளவு போதுமே. மற்றபடி எதனையும் ஆராய மாட்டார்கள், யோசிக்கமாட்டார்கள் அப்படி மிக்கேல் அதிதூதர் பற்றியெல்லாம் அவர்களுக்கு ஒரு கருத்தும் இருக்காது.

வானவர்களில் மகா முக்கியமானவரும், மிக பெரும் சக்தியுமானவர் மிக்கேல். அந்த மகா முக்கிய வான தூதருக்கு சென்ற வாரம் திருவிழா.

அவர் எப்படி இருப்பார் என யாருக்கும் தெரியாது, ஒரு யுத்தத்தில் ஸ்பானியர் தோல்வி முகம் காட்ட, அவரை வேண்டி நின்றனர். அப்பொழுதுஅப்பொழுது அவர்கள் எதிர்க்கு அஞ்சி பதுங்கிய குகையில் அவர் காட்சி கொடுத்தார், தைரியமூட்டினார்.பின் ஸ்பெயின் படை வென்றது

உலகில் அவர் கொடுத்த ஒரே காட்சி அதுதான். அதிலிருந்துதான் மைக்கேல் மாஸ் (Michaelmas) விடுமுறை தோன்றிற்று

பரங்கியர் ஆண்ட காலத்தில் செப்டம்பர் கடைசி வாரம் மைக்கேல்மஸ் விடுமுறை டிசம்பர் கடைசி கிறிஸ்மஸ் விடுமுறை, கோடையான மே மாதம் முழுக்க விடுமுறை என்றிருந்த பாதிப்புதான் இன்றும் காலாண்டு , அரையாண்டு விடுமுறையாக தொடர்கின்றது.

*காலாண்டு விடுமுறைக்கு இந்த மிக்கேல் அதிதூதரே காரணம்.*

இன்று அவருக்கு விழா, தமிழகத்தில் தென்காசி ஆலயமும், ராஜாவூர் ஆலயமும், நாகர்கோவில் மேல ஆசாரி பள்ளம், திருவாடானை ஆண்டாவூரணி அவருக்கு மிக பிரசித்தபெற்ற இடங்கள். அதுவும் தென்காசி கோவில் வெகு பிரபலம்.
சாத்த்தான்களால் பாதிக்கபட்ட மக்களுக்கு எல்லாம் விடுதலை அளிக்கும் பெரும் தெய்வமாக அவர் கொண்டாடபடுகின்றார்.

தன்னை நம்பிய மக்களை எல்லாம் அவர் காத்தே வருகின்றார், இன்றும் யூதர்களின் ஜெபமே மிக்கேல் அதிதூதர் புகழ்ச்சியுடன் தொடங்கும், அதேபோல கத்தோலிக்கர்கள் தங்கள் செபமாலையை முடிக்கும் பொழுது அதிதூதரான புனித மிக்கேலே, தேவதூதர்களான புனித கபிரியேலே,  என முடிவுரை ஆரம்பிபார்கள் யூதர்கள் அவரே தங்கள் முன்னால் நடப்பதாக நம்பிகொள்கினறனர்.

அந்த வானதூதரின் சொரூபத்தை பார்த்தால் ஒருகையில் தராசு இருக்கும், காலின் கீழே அந்த லூசிபரை மிதித்து இன்னொரு கை ஈட்டியால் குத்திகொண்டிருப்பார். தராசு எதற்கு? ஒருவன் இறந்தபின் அவரின் ஆத்மத்தை மிக்கேல் அதிதூதர்தான் இறைவனிடம் அழைத்து செல்வாராம்,அவன் பாவ புண்ணியங்களை நிறுத்து, எது அதிகமோ அதற்கான தண்டனையும்,பலனும் கொடுப்பாராம்.

இந்துக்களின் எமதர்மன் சாயல் இது,இப்படி ஆழ நோக்கினால் கிறிஸ்தவ மதத்திற்கும் இந்து மதத்திற்கும் ஏகபட்ட ஒற்றுமைகளை காண முடியும். உண்மையில் இவை எல்லாம் ஒரே மதத்தினை மூலமாக கொண்டது என்பது மட்டும் என் அவதானிப்பு

தன்னை நம்பி வணங்கி வரும் எல்லா மக்களையும், அவர்கள் எம்மதமானானும் அவர்கள் குறைகளை தீர்த்து, பேய்களை ஓட்டி காத்து வருபவர் மிக்கேல் அதிதூதர்.

அவரின் பக்தர்களுக்கு திருவிழா வாழ்த்துகள்.

Sources
@Wolfkrik Tweets
Wikipedia
Tamil Catholic Website
Dinamani


Comments