தமிழ் திரைப்படங்கள் கையாண்ட சங்கத்தமிழ் பாடல்கள்



இன்று என் அறையில் நடந்த ஒரு சிறு உரையாடலின் தொடர்ச்சியே இப்பதிவு

        தமிழ் வரலாற்றில் தொல்காப்பியத்திற்கு அடுத்து இருப்பது சங்க இலக்கியம். பாண்டிய மன்னர்களால் நிறுவப்பட்ட சங்கத்தில் புலவர்கள் இருந்து இலக்கியங்களை ஆராய்ந்ததால் இதனை சங்ககாலம் எனப்பட்டது. இன்றும் குழுமியிருந்த நண்பர்கள் அவசரமாக கிளம்ப வேண்டுமென்றால் சங்கத்த கலை என்று கூறுவது வழக்கம். கிபி முதல்  இரண்டாம் நூற்றாண்டை சங்க காலமாக கூறுவர் இக்காலத்தில் முக்கிய நூல்கள் பத்துபாட்டு மற்றும் எட்டு தொகை நூல்கள் ஆகும். 

       சங்க இலக்கியம் என்பது கற்பனையின் ஊற்று . கண்ணதாசன் ,வாலி, வைரமுத்து ஏன் பா.விஜய், தாமரை வரை அதனை தொடாமல் பாடல் இயற்றியது இல்லை. தமிழ் திரைப்பாடல்களையும் தமிழ் இலக்கியத்தையும் அவ்வளவு எளிதில் பிரிக்க முடியாது பாடல்கள்களுக்கு ‘பா’க்களை வைத்துதானே வந்தது.

           சங்க இலக்கியத்தில் அகம் புறம் என இருவகை உண்டு இரண்டுமே படிக்க அவ்வளவு இனிமையானவை. இங்கே இசைபுயலை நாம் கூறியே ஆக வேண்டும் ரஹ்மான் சங்கத் தமிழை சங்கீதமாக கொடுப்பதில் வல்லவர் காதல் இழையோடும் சங்கத்தமிழ் வரிகளை, இப்படி மெலடியாக்கிக் கொடுப்பதில் விற்பன்னர் அதிலும் வைரமுத்து-ரஹ்மான் கூட்டணி மிக அதிகமான சங்கப் பாடல்களை, சினிமாவுக்கு கொடுத்தது.

அவற்றுள் சில.

1.குறுந்தொகை – யாயும் ஞாயும் – இருவர் - நறுமுகை
2. திருப்பாவை - மாலே மணி வண்ணா  - சிவாஜி - சஹாரா
3. கலிங்கத்துப் பரணி - எடுமெடு மெடுமென வெடுத்ததோர் - ராவணன்
4. திருப்புகழ் - ஏவினை – காவியத்தலைவன்
5. குறுந்தொகை – கன்றும் உண்ணாது – தீண்டாய் – என் சுவாச காற்றே
போன்ற பாடல்களை கொடுத்திருந்தாலும்

மேற்குறிப்பட்டவற்றுள் “யாயும் ஞாயும்” பாடலை பற்றி சொல்லி கொண்டே போகலாம்.

அப்பாடல் வரிகள்
யாயும் ஞாயும் யார் ஆகியரோ
நெஞ்சு நேர்ந்தது என்ன?
யானும் நீயும் எவ்வழி அறிதும்
உறவு சேர்ந்தது என்ன?
                                      (இருவர் – நறுமுகை - வைரமுத்து)

இதன் அடிப்படைப் பாடல் கீழே!
யாயும் ஞாயும், யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும், எம்முறைக் கேளிர்?
யானும் நீயும், எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

       - செம்புலப்பெயல்நீரார்,
       குறுந்தொகை-40, குறிஞ்சித் திணை
    
இவ்வரிகளின் அர்த்தம்

என் தாயும் உன் தாயும் அறிமுகம் இல்லாதவர்கள்?
என் தந்தையும் உன் தந்தையும் உறவினரில்லை
நீயும் நானும் முன் பின் அறியாதவர்கள்
ஆனால் நாம் சந்தித்த போது
செம்மண்ணில் கொட்டிய நீர்போல
நம் இதயம் இரண்டும் ஒன்றானதே

இதே வரிகளை சில்லுன்னு ஒரு காதல் திரைப்படத்தில் கவிஞர் வாலி “முன்பே வா” பாடலில் நீரும் செங்குல சேறும் கலந்தது போலே என்று உபயோகித்திருப்பார்.

           இவ்வரிகள் 1986 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள சுரங்க ரயில் 1863 ஆம் ஆண்டு ஆரம்பித்து நூற்றாண்டு விழா கொண்டடத்தின் போது உலகில் உள்ள பழமையான மொழிகள் அனைத்திலும் இருந்து 5-6 வரிகள் உள்ள பாடல் பிரசுரிக்கப்பட்டது அதில் காதலை குறிக்கும் மிக பழமையான சிறந்த வரியாக இக்குறுந்தொகை வரிகள் தெரிவு செய்யப்பட்டன. இதனை “Red Earth and Pouring Rain” என்று கொண்டாடினார்கள்


           நாம் இப்போது பார்க்கும் பாடல் காதலன் திரைப்படத்தில் “இந்திரையோ இவள் சுந்தரியோ” என்ற பாடல்.

பாடல்

‘இந்திரை யோஇவள் சுந்தரி யோதெய்வ
ரம்பையோ மோகினியோ-மனம்
முந்திய தோவிழி முந்திய தோகரம்
முந்திய தோவெனவே-உயர்
சந்திரசூடர் குறும்பல வீசர்
சங்கணி வீதியிலே-மணிப்
பைந்தொடி நாரி வசந்தவொய் யாரிபொற்
பந்துகொண் டாடினளே’


எளிதாக படிக்க

‘இந்திரையோ இவள் சுந்தரியோ
தெய்வ ரம்பையோ மோகினியோ
மனம் முந்தியதோ
விழி முந்தியதோ
கரம் முதியதோ எனவே..
உயர் சந்திரசூடர், குறும்பலவீசர் சங்கணி வீதியிலே
மணி பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி
பொற் பந்து கொண்டாடினளே’

           இப்பாடல் குற்றாலக்குறவஞ்சி என்னும் சிற்றிலிக்கிய வகையை சார்ந்தது இவற்றுள் சிற்றிலக்கியம் என்பது கீழ்காணும் அடிப்படைகளைக் கொண்டுள்ளது.
  • சிற்றிலக்கியம் அளவில் (பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கியதாக அமைவது.
  • அகப்பொருள், அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும். (கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவதும் உண்டு.)
  • பாடப்பெறும் கடவுள் அல்லது மன்னன் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு கூறு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக: உலா இலக்கியம் தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்படுவது.
  • அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றைத் தருவதாக அமைவது சிற்றிலக்கியம்.
அதிலும் மேற்குறிப்பிட்ட குறவஞ்சி என்பது  ஒரு தமிழ் பாடல் நாடக (opera) இலக்கிய வடிவமாகும். இது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகும்.
பாட்டுடைத் தலைவன் உலாவரக் கண்ட தலைவி ஒருத்தி, அத்தலைவன் மீது காதல் கொண்டு அவனை அடையத் தவிக்கும் நிலையில், குறவர் குலத்தைச் சார்ந்த பெண் ஒருத்தி அத்தலைவிக்குக் குறி கூறிப் பரிசில் பெறும் செய்திகளைக் கூறுதலால் குறவஞ்சி என்னும் பெயர் பெற்றது
               தமிழ்நாட்டின் தென்கோடியில் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் எனும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து அங்குள்ள ஈசரான குற்றாலநாதரைப் போற்றி, தெய்வக் காதல் பற்றிய கற்பனையை அமைத்துப் பாடப்பெற்ற நூல் திருகுற்றாலகுறவஞ்சி ஆகும்.
               இப்பாடல் இன்றும் என் நினைவில் பசுமரத்தாணி போல நீங்காத இடம்பெற்றுள்ளது நான் பதின்ம வயதில் அடி எடுத்து வைத்த காலத்தில் என் தமிழாசிரியரால் சொல்லி தரப்பட்ட பாடல் ஒரு வெள்ளி கிழமை மாலை ஒரு கருமேகம் சூழ்ந்த பொழுதில் விட்டால் மழை அடித்து ஊத்தும் தருவாயில் இப்பாடலை படித்த ஞாபகம். அதன் விளக்கம்
               திருக்குற்றாலநாதர் சிறு பலா மரத்தடியில் எழுந்தருளியிருக்கிறார். சங்குப் பூச்சிகள் அணியாகச் செல்லும் அந்தத் தெருவில் பச்சை வளையல் அணிந்த வசந்தவல்லி தன் தோழிகளுடன் ஒரு சிவன் கோவிலுக்கு போகும் வழியில் பந்து விளையாடுகிறாள்.
              அதைப் பார்க்கிறவர்களெல்லாம் ‘யார் இவள்?’ என்று வியந்துபோகிறார்கள். ‘திருமகளா? ரதியா? தேவலோகத்தைச் சேர்ந்த ரம்பையா? மோகினியோ?’ எனக் கேள்விகளை அடுக்குகிறார்கள்.
               வசந்தவல்லியின் அழகுமட்டுமில்லை, அவளது விளையாட்டு நுட்பமும் அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. ‘பந்தை அடிக்கும்போது இவளது மனம் முந்துகிறதா, அல்லது கண்கள் முந்துகின்றனவா, அல்லது கைகள் முந்துகின்றனவா?’ என்று திகைக்கிறார்கள். அந்த அழகான மும்முனைப் போட்டியைக் கண்டு ரசிக்கிறார்கள்.
                ’மனம் முந்தியதோ, விழி முந்தியதோ, கரம் முந்தியதோ’ என்கிற இந்தக் வரியை இன்றைக்கும் கிரிக்கெட் அலசல்களில் அவ்வப்போது பயன்படுத்தப்படுவதுதான், சச்சின், சேவாகின் சில Shot களை பார்க்கும் போது ‘எப்படிய்யா அந்த ஷாட்டை ஆடினான்?’ என்று தோன்றும்.

மற்றவை அடுத்த பதிவுகளில்


Comments

Post a Comment

Popular Posts